வட டெல்லி நீதிமன்றம் ஒன்றில் இன்று இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். இது தவிர, மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
கைதி ஒருவரை விசாரணைக்காக நீதிமன்றத்திற்கு அழைத்துச்சென்றபோது, சட்டத்தரணிகளை போல உடைதரித்த இரு வேடதாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளனர்.
கைதிக்கு காவலாக வந்திருந்த காவல்துறையினர் பதில் தாக்குதலை மேற்கொண்டு இரண்டு துப்பாக்கிதாரிகளையும் சுட்டு கொன்றனர்.
பல குற்றச்செயல்களுடன் தொடர்பு கொண்ட ஜிற்ரெண்டர் கோகி என்ற கைதி சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமானதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எதிர் குற்றக்குழுவொன்றினால் இந்த தாக்குதல் திட்டமிடப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு குழுக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மோதல்கள் காரணமாக இரு குழுக்களையும் சேர்ந்த 25 பேருக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
அதி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நீதிமன்றத்தில் இடம்பெற்ற இந்த சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள நீதிமன்றத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.