இந்தியாவில் திருச்சி மாவட்டத்தில் ஆடு திருடர்களால் உதவி காவல்துறை பரிசோதகர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 10 வயது சிறுவன் உட்பட 4 பேர் காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர்.
திருச்சி நவல்பட்டு காவல்நிலையத்தின் உதவி காவல்துறை பரிசோதகர் பூமிநாதன், ஆடு திருடர்களை உந்துருளியில் விரட்டி சென்றபோது நேற்று அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்ட எல்லைப் பகுதிகளில் பூமிநாதனுக்கு அருகே இருந்த கைப்பேசி பற்றிய விவரங்களைக் காவல்துறையினர் ஆய்வு செய்தனர்.
அதன்படி புதுக்கோட்டையை சேர்ந்த 10 வயது, 17 வயது சிறுவர்களை தமது பொறுப்பில் எடுத்த காவல்துறையினர், 19 வயது உள்ளிட்ட இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
அதற்கமைய, அவர்களின் உந்துருளிகளையும் கொலை செய்யப் பயன்படுத்தியதாகக் கருதப்படும் கூரிய ஆயுதங்களையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.