காஷ்மீர் மனித உரிமை ஆர்வலர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

khurram parvez 7591
khurram parvez 7591

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளித்த வழக்கில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மனித உரிமை ஆர்வலர் குர்ரம் பர்வேஸ் என்பவரை இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் திங்கட்கிழமை அதிகாலை  இந்திய தேசிய புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போதே  குர்ரம் பர்வேஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் காவல்துறை மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படை பணியாளர்களின் உதவியுடன் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆர்வலர் பர்வேஸ் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குர்ரம் பர்வேஸ் மீது 2016 ஆம் ஆண்டு பொது பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் பங்கேற்க சுவிட்சர்லாந்து செல்ல தடை விதிக்கப்பட்ட ஒரு நாள் கழித்து அவர் கைது செய்யப்பட்டார். 76 நாட்கள் சிறைவாசத்திற்குப் பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

பர்வேஸ், தன்னிச்சையாக காணாமல் போனவர்களுக்கு எதிரான ஆசிய கூட்டமைப்பின் தலைவராகவும், ஜம்மு காஷ்மீர் சிவில் சமூகத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். 

2004 நாடாளுமன்றத் தேர்தலைக் கண்காணிக்கும் போது கண்ணிவெடியில் சிக்கி தனது காலினை இழந்தமையும் குறிப்பிடத்தக்கது.