புகழ்பெற்ற பொற்கோயிலுக்குள் நுழைந்த இளைஞர் அடித்துக்கொலை!

golden temple pti
golden temple pti

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், அமிர்தசரஸில் அமைந்துள்ள புகழ்பெற்ற பொற்கோயிலுக்குள் நுழைந்த இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி கோவிலில் நேற்று மாலை பிராத்தனை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சீக்கியா்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப் வைக்கப்பட்டுள்ள கருவறையின் மையப்பகுதிக்குள் பாய்ந்த நபரொருவர், அங்கு வைக்கப்பட்டிருந்த வைரம் பதிக்கப்பட்ட வாளை எடுக்க முற்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் நேரடியாக அங்கிருந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதால், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கிருந்தவர்கள் குறித்த நபரைப் பிடித்து, தெய்வ நிந்தனையில் ஈடுபட்டதாகக்கூறி அவரை கடுமையாகத் தாக்கியுள்ளனா்.

இதில் பலத்த காயமடைந்த அந்நபர் அவ்விடத்திலேயே  உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 20-25 வயது மதிக்கத்தக்கவர் என்றும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்துமாறு மாநில காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.