பாகிஸ்தான் – சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில் உள்ள நரேன்புரா நகரில் சுவாமி நாராயணன் கோவில் ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த கோவிலில் இந்துக்கள் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது கோவிலுக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் திடீரென சாமி சிலைகளை அடித்து, உடைத்து சேதப்படுத்தினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அங்கிருந்த இந்துக்கள் அந்த வாலிபரை பிடித்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கோவிலுக்குள் புகுந்து சாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தால் கோபமடைந்த உள்ளூர் இந்து சமூகத்தினர் காவல்நிலையம் முன்பு ஒன்று திரண்டு இந்துக்களின் பாதுகாப்புக்கு அரசு உத்தரவாதம் வழங்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானில் சமீபகாலமாக இந்து கோவில்கள் அடிக்கடி சூறையாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.