சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அந்த விடயம் குறித்து மட்டுமே விசாரிக்கவுள்ளதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது தொடர்பான வழக்கு இன்று (திங்கட்கிழமை) 9 நீதியரசர்கள் கொண்ட அமர்வின் முன் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கினை விசாரணை செய்த நீதிபதிகள், ”இந்த வழக்கில் சபரிமலை விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் அந்த அம்சத்தை மட்டுமே விசாரிக்க உள்ளோம்.
மதவழிபாட்டு ஸ்தலங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக கூறுவது குறித்த விவகாரத்தை விசாரிப்போம். இந்த வழக்கில் 50-க்கும் மேற்பட்ட மறுசீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதனை நாங்கள் விசாரிக்கப்போவதில்லை” எனக் கூறினர்.
கேரளாவின் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் செல்ல அனுமதியில்லை. இந்த நடைமுறையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த அரசியல் சாசன அமர்வு, அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்கு செல்லலாம் என உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.