ஒரு நாடு எத்தனை வாரங்களுக்கு முடக்கப்பட வேண்டும்?

50
50

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க ஒரு நாடு குறைந்தது 6 முதல் 10 வாரங்கள் முழு அடைப்பை பின்பற்ற வேண்டும் என மைக்ரோசொப்ட் ஸ்தாபகர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தில் அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தப்பிக்க ஒரு நாடு குறைந்தது 6 முதல் 10 வாரங்கள் முழு அடைப்பை பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.

முழு அடைப்பை பின்பற்றினாலே ஓரளவு கொரோனோவை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கான தடுப்பு மருத்தை செயற்படுத்த இன்னும் 18 மாதங்கள் ஆகலாம் எனவும் ஆனாலும் அதனை உறுதியாக சொல்ல முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவேளை, கடந்த 2015ம் ஆண்டு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய பில்கேட்ஸ் கொரோனா வைரஸின் தாக்கம் குறித்து பேசியிருப்பதாக தற்போது சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதில், அடுத்த பத்தாண்டுகளில் உலகிற்கும் மனித இனத்திற்கும் பேராபத்தாக போர் இருக்காது. அதைவிட பேராபத்தாக வைரஸ் இருக்கும் என்றும் பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

இந்த கொடிய வைரஸ் மூலம் உலகளாவிய ரீதியில் சுமார் ஒரு கோடி மக்கள் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கொரோனா வைரஸ் குறித்து 2015ம் ஆண்டே மைக்ரோசொப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

2015ம் ஆண்டில் பரவிய எபோலா வைரஸை கட்டுப்படுத்த தேவையான திட்டங்களும் வழிவகைகளும் இல்லை எனத் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் சுகாதாரத்துறையினர் துல்லியமாக செயற்பட்டதாலேயே அதனை கட்டுக்குள் வைக்க முடிந்தது எனவும் பில்கேட்ஸ் குறிப்பிட்டிருந்தார்.

எபோலா ஒரு தொற்று நோயாக இருந்தாலும் அது காற்றின் மூலம் பரவவில்லை என்பதாலே உலக நாடுகளில் மிகப்பெரிய இழப்பு ஏற்படவில்லை. ஆனால் அடுத்தமுறையும் இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது.

அடுத்தமுறை ஏற்படும் வைரஸ் தொற்றினை தடுக்க உலக நாடுகள் இணைந்து போராட வேண்டிவரும் என அப்போதே பில் கேட்ஸ் ஆரூடம் தெரிவித்திருந்தார்.

அணு ஆயுதங்களை தயாரிப்பதற்கே கோடிக்கணக்கான பணத்தை உலக நாடுகள் செலவிடுகின்றன. ஆனால் தொற்று நோயை தடுக்கும் ஆராய்ச்சிகளுக்கு போதுமான பணம் ஒதுக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.

தொற்று நோய் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள போதுமான மருத்துவ வல்லுநர்களும் தொற்று நோயியல் நிபுணர்களும் இல்லை எனவும் பில் கேட்ஸ் கூறியிருந்தார்.

அன்று பில் கேட்ஸ் கூறிய கூற்றுக்கு இணங்க இன்று உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோயினை இதுவரை கட்டுப்படுத்த முடியவில்லை.

அது பல நாடுகளில் பரவியுள்ள நிலையில் இதுவரை பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் குறுகிய காலப்பகுதியில் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்துகளை தயாரிக்க பல நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்த போதிலும், இதுவரை கண்டுபிடிக்கவில்லை.

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காகவும் 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.