பாகிஸ்தானுக்கு கெடு விதித்தது இந்தியா!

india and pakistan
india and pakistan

இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்திலுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரகம் டெல்லியிலும், பாகிஸ்தானுக்கான இந்திய தூதரகம் இஸ்லாமாபாத்திலும் அமைந்துள்ளது.

இரு நாட்டு தூதரகங்களிலும் சராசரியாக 110 தூதரக அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.

இதற்கிடையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய 2 அதிகாரிகள் இந்தியாவில் உளவு வேலையில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தகவல் கொடுத்து வந்தனர்.

இதனால் குறித்த அதிகாரிகளை தூதரக பொறுப்பில் இருந்து இந்தியா நீக்கியது. மேலும், அவர்கள் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் எனவும் மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பியது.

இந்த சம்பவம் நடந்த மறு நாள் பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றி வந்த இந்திய அதிகாரிகள் இரண்டு பேர் மாயமாகினர்.

பின்னர் வெளியுறவுத்துறையின் தலையீட்டை அடுத்து பொலிஸாரின் பிடியில் இருந்த அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த விவகாரம் தற்போது பூதாகரமாகி வருகிறது.

இந்நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகத்தில் உள்ள அதிகாரிகளின் எண்ணிக்கையில் 50 சதவிகிதம் பேரை (55 பேர்) 7 நாட்களுக்குள் குறைக்க வேண்டும் என அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

மேலும், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை 50 சதவிகிதம் பேராக குறைப்பதகற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.