அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவில், முழுமையாக கற்களால் மட்டுமே கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, ராமர் கோவில் கட்டுவதற்கான, பூமி பூஜை விழா, உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், நாளை 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதையொட்டி, அயோத்தி நகர் முழுவதும் விழாக் கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், கோவில் கட்டுமானம் குறித்து நிர்வாகிகள் தெரிவிக்கையில்,
ராமருக்கான கோவிலில், இரும்பு கம்பிகள், மரம், தாமிரம், வெள்ளை சீமெந்து ஆகியவை பயன்படுத்தப்படாது. பல நுாற்றாண்டுகள் நிலைத்து இருக்கும் என்பதால், முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே கட்டப்படும்.
இதற்கு தேவையான கற்கள் ஏற்கனவே அயோத்தியில் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் கற்கள், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்படவுள்ளன. பக்தர்கள் நன்கொடையாக வழங்கும் தங்கம், வெள்ளி, தாமிரம் ஆகியவை, கோவிலுக்கான அஸ்திவாரத்தில் பயன்படுத்தப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.