2 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன பெண் கடலில் இருந்து உயிருடன் மீட்பு!

கணவனின் கொடுமை தாங்க முடியாது 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறி காணாமல்போன கொலம்பியா நாட்டு பெண் கடலிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கொலம்பிய நாட்டைச் சேர்ந்தவர் ஏஞ்சலிகா கெய்டன். இவர் தனது கணவரின் துன்புறுத்தல் காரணமாக கடந்த 2018ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறியதையடுத்து அவரது குடும்பத்தினர் இரண்டு ஆண்டுகளாக அவரை தேடி வந்தனர்.

ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் ஏஞ்சலிகா கெய்டன் கொலம்பியா கடலில் இருந்து மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளார். அவர் கடந்த சனிக்கிழமை காலை 6 மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.

புவேர்ட்டோ கொலம்பியாவின் கரையிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் மயக்கமடைந்த நிலையில் கெய்டன் காணப்பட்டார். இதைப்பார்த்த ரொலாண்டோ விஷ்பல் லுச் மற்றும் அவரது நண்பர் சேர்ந்து ஏஞ்சலிகா கெய்டனை மீட்டு கரைக்கு கொண்டுவந்தனர். இதனை அடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து பேசிய ஏஞ்சலிகா கெய்டன், “நான் 20 ஆண்டுகளாக கணவரால் துன்புறுத்தப்பட்டு வந்தேன். அவரது துன்புறுத்தல் தாங்க முடியாததால் 2018 ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறினேன். பின்னர், காமினோ டி ஃபெ மீட்பு மையத்தில் தங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு ஆறு மாதங்கள் தெருக்களில் அலைந்தேன்.

இருப்பினும் எனக்கு வாழ்வதற்கான எந்த வழியும் கிடைக்காததால் வாழப்பிடிக்கவில்லை. அதனால் தற்கொலை செய்து கொள்ள கடலில் குதித்தேன். ஆனால் நான் உயிரை விடுவதை கடவுள் விரும்பவில்லை. நான் மீண்டும் பிறந்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.