இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டை மீறி வருவதாக அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் கில்லியன் கீகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்புகள் இங்கிலாந்தின் வடமேற்கு, யார்க்ஷயர் மற்றும் வெஸ்ட் மிட்லாண்ட்ஸில் இங்கிலாந்து முழுவதையும் விட இரு மடங்கு வேகமாக அதிகரித்து வருகிறது.
இங்கிலாந்து முழுவதும், ஒவ்வொரு நாளும் சுமார் 45,000 புதிய நோய்த்தொற்றுகள் ஏற்படுவதாக லண்டன் இம்பீரியல் கல்லூரி மற்றும் இப்சோஸ் மோரி அறிக்கை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தின் வடக்கு மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று விகிதங்கள் தொடர்ந்து உயர்ந்ததையடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் அதிகரித்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 609 கொரோனா வைரஸ் நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 77 இறப்புகள் பதிவாகியுள்ளன.இந்நிலையில், பிரதமர் பொரிஸ் ஜோன்சன் திங்களன்று நாட்டை மூன்று அடுக்குகளாகப் பிரிக்கும் திட்டங்களை முறையாக வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தினை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என அரசாங்கத்தின் அவசரநிலைகளுக்கான அறிவியல் ஆலோசனைக் குழுவினர் (SAGE) வலியுறுத்தியதைத் தொடர்ந்து பிரதமரின் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மதுபான விடுதிகள், உணவகங்கள் மூடுவது கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை தடுக்க உதவாது என SAGE உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், போதிய நிவாரண தொகையை வழங்காமல் வணிக நிறுவனங்களை மூடுவது அது சார்ந்திருக்கும் நபர்களை பெரிதளவில் பாதிக்கும் என்றும், எனவே உரிய நிவாரண தொகை வழங்கப்படுவது உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என்றும் கீகன் தெரிவித்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையானது 5.64 இலட்சத்தினை கடந்துள்ளது. இதுவரை 42,682 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.