தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்

596830
596830

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, தொடர் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு காலமானார்.

நேற்று (சனிக்கிழமை) இரவு, 11.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடந்த 12ஆம் திகதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவர், முண்டியம்பாக்கத்தில் உள்ள அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது, அமைச்சர் துரைக்கண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

மேலும், அவருக்கு இதய பாதிப்புஏற்பட்டதால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்தியர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தார்.

எனினும், அவரது நுரையீரலில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக காவேரி வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.

இந்நிலையிலேயே நேற்று இரவு சிகிச்சை பலனின்றி, அமைச்சர் துரைக்கண்ணு உயிரிழந்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.