பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியது ஜப்பானுக்கு கவலை

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகிக்கொண்டமை மிகவும் மனவருத்தத்திற்கு உரியது என ஜப்பான் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் உயர்மட்ட ஊடகப் பேச்சாளர் காற்ஷுனோபு கட்டோ (Katsunobu Kato) இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “காலநிலை மாற்றம் தொடர்பிலான விடயங்கள் ஒற்றை நாட்டுக்கான ஒன்றல்ல. இது ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்தாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “இந்தப் பின்னணியில், அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து விலகிக்கொண்டமை மிகவும் மனவருத்தத்திற்கு உரியது” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இடம்பெற்று வாக்கெண்ணும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா முறையாக விலகிக்கொள்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்தார்.

இதேவேளை குறித்த ஒப்பந்தத்திலிருந்து விலகிக்கொள்ளும் முதல் நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.