மத்திய பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி வீழ்ந்த 3 வயது குழந்தையை மீட்கும் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகின்றது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விராலிமலை பகுதியில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை சுஜித் என்ற சிறுவன் தவறி விழுந்தான்.
குழந்தையை உயிருடன் மீட்க நடந்த பல்வேறு முயற்சிகள் தோல்வி அடைந்தன. 4 நாட்களுக்கு பின் சிறுவனின் சடலத்தையே மீட்டனர். இந்த சம்பவம் இந்தியா மாத்திரமன்றி உலக முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் இன்னும் இந்தியாவில் பல்வேறு இடங்களில் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் தவறிவிழுவது தொடர் கதையாகவே இருந்து வருகின்றது. இந்தநிலையில் மத்திய பிரதேசத்தில் 3 வயது குழந்தை தவறி வீழ்ந்துள்ளான்.
மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ள சேதுபுராபரா என்ற கிராமத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த கிராமத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவரின் 3 வயது மகன் பிரகால்த், விளையாடிக் கொண்டிருந்த போது அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.