அமெரிக்க துணை ஜனாதிபதியின் முதன்மை ஆலோசகர் யாழ் தமிழ் பெண்!

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் முதன்மை ஆலோசகராகவும், தலைமை பணியாளராகவும் செயற்படுபவர் யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட அமெரிக்கரான ரோஹினி கொசோக்லு என்ற தமிழ் பெண் ஆவார்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடன் போட்டியிட்டு, வெற்றியீட்டியுள்ள நிலையில் அவரது கட்சி சார்பில் துணை ஜனாதிபதியாகியுள்ள தமிழ் பின்னணியை கொண்ட கமலா ஹாரிஸ் அமெரிக்க – ஆபிரிக்க பின்னணியையும் கொண்டிருந்தார்.

யாழ்ப்பாண பின்னணியை கொண்ட ரோஹினி 2018 ஆம் ஆண்டில், ஹாரிஸின் தலைமைப் பணியாளராகப் பொறுப்பேற்றார். அந்த நேரத்தில் அமெரிக்க செனட்டர் ஒருவருக்கு தலைமைப் பணியாளர் பதவியை வகித்த ஒரே அமெரிக்க – ஆசிய பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

இருப்பினும், அந்த நேரத்தில் கமலா ஹாரிஸின் தலைமைப் பணியாளராக ரோஹினி நியமிக்கப்பட்டபோது, ​​மற்ற ஜனநாயகக் கட்சி சகாக்கள் சிலர் அதிருப்தி அடைந்தனர். அதிருப்தியாளர்கள் பெரும்பாலானோர் வெள்ளையர்கள்.

ரோகிணி கொசோக்லுவின் பெற்றோர் வைத்தியர் விஜயதேவேந்திர ரவீந்திரன் மற்றும் ஷோபனா ரவீந்திரன். அவர்கள் 1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தனர். ரோஹினி அரசியல் நிறுவனமான ஹார்வர்ட் கென்னடி இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸின் உறுப்பினராகவும் உள்ளார்.

ரோஹினி மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் ஜோர்ஜ் வோஷிங்டன் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி ஆவார். மிச்சிகன் செனட்டர் டெபி ஸ்டெபெனோ சார்பில் பணியாற்றும்போது கடிதத் தொடர்பு மேலாளராக அரசியலில் நுழைந்தார். பட்டம் பெற்ற பிறகு, ஸ்டீபெனோவின் மூத்த கொள்கை ஆலோசகராக பணியாற்றினார். பின்னர் அவர் கொலராடோ செனட்டர் மைக்கேல் பென்னட்டின் கீழ் ஒரு மூத்த சுகாதார ஆலோசகராக பணியாற்றினார், அந்த நேரத்தில் ஒபாமா கெயார் திட்டத்திலும் பணியாற்றினார்.

ஏழு ஆண்டுகள் பென்னட்டின் அலுவலகத்தில் பணியாற்றிய ரோஹினி, அப்போது செனட்டர் கமலா ஹாரிஸின் துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்றார். மேலும் படிப்படியாக ஹாரிஸின் தலைமைத் தலைவராகவும் மூத்த ஆலோசகராகவும் உயர்ந்தார்.