ஹொங்கொங் அரசாங்கம் எதிர்த்தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வரை இன்று பதவிநீக்கம் செய்துள்ளது.
முன்னதாக, நீதிமன்றத்துக்குச் செல்லாமல், அந்த நால்வரையும் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் ஹொங்கொங் தலைமை நிர்வாகி கேரி லாம்முக்கு உண்டு என்னும் தீர்மானம் சீன நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து சிறிது நேரத்தில் ஹொங்கொங்கின் பதவி நீக்க நடவடிக்கை குறித்த தகவல் வெளியானது.
அவர்கள் நால்வரும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக விளங்குவதாக தெரிவிக்கப்பட்டதுடன், மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
70 உறுப்பினர்களைக் கொண்ட ஹொங்கொங் சட்டமன்றத்தில் 19 பேர் ஜனநாயகத்தை ஆதரிப்பவர்களாவர்.
தங்களில் யாரேனும் பதவி நீக்கம் செய்யப்பட்டால், அனைவரும் ஒன்றுபட்டுப் பதவி விலகப்போவதாக நேற்று முன்தினம் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.