எனது சிறுபராயத்தில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இந்துக் கதைகளைக் கேட்டே வளர்ந்தேன் என முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதனால் என் மனதில் இந்தியாவுக்கு எப்போதும் ஒரு சிறப்பிடம் இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
உலகெங்கும் நேற்று(17.11.2020) வெளியாகிய “வாக்குறுதியளிக்கப்பட்ட நிலம்” (A Promised Land) என்னும் பெயரிலான தனது நினைவுத் தொகுப்பு நூலிலேயே அவர் இத்தகவலைப் பதிவு செய்திருக்கிறார்.
குறித்த நூலில் – தனது துணை அதிபரும் தற்போது அதிபராக தெரிவாகி இருப்பவருமானஜோ பைடன் பற்றிய பல சுவாரஸ்யமான விடயங்களை அவர் எழுதியுள்ளார்.
தனது பதவிக்காலத்தின் முதல் ஐந்து ஆண்டுகால அனுபவங்களை விபரிக்கும் அவரது நூலின் 768 பக்கங்கள் கொண்ட முதற்பாகம் ஆங்கிலத்திலும் வேறு 24 மொழிகளிலும் அச்சிடப்பட்டுள்ளது.
சமகால உலகத் தலைவர்கள் பற்றிய தனது எண்ணங்கள், தனது பதவிக்காலத்தில் பூகோள அரசியல் குறித்து எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள், தனது சொந்த வாழ்க்கைப் பின்னணி எனப் பல தகவல்களைக் கூறும் இந்த நூல் ஏற்படுத்தக்கூடிய அரசியல் அதிர்வுகளை அறிவதற்காக முழு உலகமும் காத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.