ஆர்யா ஹீரோவாக மட்டும் இல்லாமல் தற்போது வில்லனாகவும் நடிக்க பல படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். வில்லன் வேடங்களில் நடிப்பது அவருக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
ஆர்யா பல படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திய திரைப்படம் என்றால் அது பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் படம் தான். அதற்கு முன்னாள் அப்படி ஒரு நடிகரை அந்த கதாபாத்திரத்தில் தமிழ் சினிமா பார்த்தது கிடையாது.
அதனைத் தொடர்ந்து அவ்வப்போது ஹிட் படங்களையும் பல தோல்விகளைக் கொடுத்துக்கொண்டிருந்த ஆர்யா சமீபகாலமாகத்தான் கதை தேர்வில் கவனமாக செயல்பட்டு வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் திரைப்படங்கள் டெடி மற்றும் சார்பட்டா பரம்பரை.
ஹீரோவாக படங்களில் நடித்திருந்தாலும் தற்போது விஷாலுக்கு வில்லனாக எனிமி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஆர்யாவுக்கு மிக கொடூரமான வில்லன் வேடம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவின் ஸ்டைலிஷ் ஸ்டார் நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக புதிய படமொன்றில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் புஷ்பா. ஐந்து மொழிகளில் வெளியாகும் இந்தப் படத்தில் முதலில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதிதான் ஒப்பந்தமானார். பின்னர் கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்விலக பிறகு பாபி சிம்ஹா தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியானது.
ஆனால் இறுதியாக புஷ்பா படக்குழுவினர் ஆர்யா நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை ஒப்பந்தம் செய்துள்ளார்களாம். ஏற்கனவே அல்லு அர்ஜுனுக்கு வில்லனாக வருடு (varudu) என்ற தெலுங்கு படத்தில் ஆர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.