தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் கடந்த பிப்ரவரி .12-ஆம் திகதி தெலுங்கில் வெளியான படம் உப்பென்னா. அறிமுக இயக்குனர் பிச்சிபாபு சனா இயக்கி இருந்த இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
புதுமுகங்கள் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளதோடு, ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன், ராம் சரண் உள்ளிட்ட பலர், இந்தப் படத்தை பார்த்துவிட்டுப் படக்குழுவினரை நேரில் அழைத்துப் பாராட்டினர்.
இந்நிலையில், உப்பென்னா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், உலகளாவிய மொத்த வசூலில் ‘உப்பென்னா’ திரைப்படம் 100 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.