திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்க தவறி விட்டோம்: இயக்குனர் வசந்தபாலன் வருத்தம்!

samayam tamil 1 3
samayam tamil 1 3

‘ஹோம்’ படம் குறித்து இயக்குனர் வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோஜின் தாமஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் ‘ஹோம்’. அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தப் படம் ரசிகர்கள், விமர்சகர்கள் என பலரிடமும் பாராட்டுக்களை பெற்று வருகிறது. மேலும் பல்வேறு திரையுலக பிரபலங்களும் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவினரைப் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இயக்குனர் வசந்தபாலன் தனது முகப்புத்தகத்தில் இந்தப்படம் குறித்து பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘ஹோம்’ படம் குறித்து வசந்தபாலன் தனது முகநூல் பதிவில், “கதைக்காக எங்கெங்கோ தேடுகிறோம். வீட்டுக்குள்ளேயே கதை இருக்கிறது என்பதை ‘ஹோம்’ திரைப்படம் உணர்த்துகிறது. இன்றைய வாழ்வின் அற்பங்கள் மூலமாக வாழ்வின் அதித உன்னதத்தை ஹோம் பேசுகிறது. ஒரு மாத கண்ணீரும் நேற்றிரவு என் தலையணையை நனைத்தது. கண்ணீர் வெளியேறியது ஒருவித விடுதலையாக இருந்தது.

மலையாள சினிமா ஓடிடியின் தன்மையை, தனித்துவத்தை மிகச் சரியாகப் புரிந்து கொண்டு தொடர்ந்து நல்ல திரைப்படங்களை எழுதி வெளியிடுகிறது. தமிழ் சினிமா உண்மையாகவே மூச்சு திணறுகிறது. திரைக்கதை ஆசிரியர்களை உருவாக்கத் தவறியதின் துயரத்தை தற்போது அனுபவிக்கிறோம் என தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார் வசந்தபாலன்.

ஜிவி பிரகாஷ் இயக்கத்தில் வசந்தபாலன் இயக்கியுள்ள ஜெயில் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. தற்போது அர்ஜுன் தாஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் வசந்தபாலன். கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மீண்டும் துவங்கி நடைபெற்று வருகிறது.