இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான “M.S. Dhoni: The Untold Story” படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட். 34 வயதான இவர், நேற்று மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முன்னர் சுஷாந்த் தீவிர மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவரது மன அழுத்தத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றனர். ஆனால் அவரது தற்கொலைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அவரது தாய்வழி மாமா.
இது தொடர்பாக பாட்னாவில் உள்ள சுஷாந்தின் வீட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சுஷாந்த் தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. அவரது மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதுபோல் தெரிகிறது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். இதுபற்றி பொலிசார் தீவிர விசாரணை நடத்தவேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சுஷாந்த் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஜன் அதிகார் கட்சி தலைவர் பப்பு யாதவும் கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.