தன்னை அவமதித்த மொழிப்படங்களில் இனி பாடமாட்டேன் – விஜய் யேசுதாஸ்!

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ், இனிமேல் மலையாள மொழிப்படங்களில் பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார்.

கே.ஜே.யேசுதாசின் மகனும் பிரபல பின்னணி பாடகருமான விஜய் யேசுதாஸ் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவர் மலையாள படங்களில் பாடி தமது திரைப்பயணத்தை தொடங்கியிருந்த நிலையில் தற்போது மலையாள மொழிப்படங்களில் பாடமாட்டேன் என தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகில் தமக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அங்கு பலமுறை அவமானங்களை சந்தித்ததாகவும் விஜய் யேசுதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறி உள்ளார். இவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதேவேளை இவர் மூன்று முறை கேரள அரசின் விருதையும், ஐந்து முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ளார்.

விஜய் யேசுதாஸ் படைவீரன், மாரி போன்ற படங்களிலும் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.