செருப்படை மூலிகையின் மருத்துவ குணங்கள்

Seruppadai
Seruppadai

செருப்படை முழுத் தாவரமும் வெப்பத் தன்மையும் கொண்டது. உடல் வெப்பத்தை அதிகரிக்கச் செய்யும். சளியை முற்றிலும் குணப்படுத்தும்.

தரையோடு படர்ந்து வளரும் சிறு செடி. சொர சொரப்பான தாவரம். இலைகள் நீள் வட்டம் அல்லது முட்டை வடிவமானவை. மெழுகு பூசினாற் போன்றவை. மலர்கள் சிறியவை. இதற்கு பெரியசெருப்படை, பெருஞ்செருப்படை போன்ற பெயர்களும் உண்டு. முழுத் தாவரமும் மருத்துவத்தில் பயன்படும்.

செருப்படை இனத்தில் சிறு செருப்படை, பெருஞ்செருப்படை என இருவகை உண்டு. இவற்றில் சிறு செருப்படை மிகுந்த குணமுடையது. இதனை செந்தூர மூலி எனக்கூறுவர்.

சிரங்கு கட்டுபட செருப்படைச் சாறு, வெள்ளை வெங்காயச் சாறு 30 மில்லியுடன் சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து வடிகட்டி காலையில் மட்டும் குடிக்க வேண்டும். 4 நாள்கள் இவ்வாறு செய்ய வேண்டும். நாவறட்சி, விக்கல் ஆகியவை தீர செருப்படை, மிளகு, திப்பிலி ஆகியவற்றை தனித்தனியாக சுட்டு அவற்றின் சாம்பலைச் சம அளவாக கால் தேக்கரண்டி அளவு  தேனில் குழைத்து ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நாக்கில் தடவி வந்தால் சிறந்த பயன் கிடைக்கும்.