சரும பொலிவு தரும் எலுமிச்சை!

image 2021 05 26 234554
image 2021 05 26 234554

கொளுத்தும் வெயிலில் வெளியில் செல்பவர்களுக்கு மட்டுமே சருமத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்று பலரும் நினைப்பதுண்டு. ஆனால் ஊரடங்கு காலத்தில் வீட்டிற்குள் இருந்தாலும் பல்வேறு காரணங்களால் சரும பாதிப்புகள் ஏற்படலாம். வெப்பம், வியர்வை, உடலின் நீர் வறட்சி மற்றும் மின் விளக்கு வெளிச்சம் போன்றவற்றாலும் பாதிப்பு வரலாம். இதை தடுக்க எலுமிச்சையை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் எளிய அழகு குறிப்புகள்.

எலுமிச்சை சாறுடன் தயிர் அல்லது முட்டையின் வெள்ளைக்கருவை கலந்து முகத்தில் தடவி பத்து நிமிடங்கள் உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வர முகத்தில் உள்ள கருமை நீங்கி பொலிவடையும்.

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து தேய்த்தால் சருமம் பளபளக்கும். பாலில் எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர சூரிய ஒளியால் ஏற்படும் கருமையான சரும நிறம் மாறும்.

முதல் நாள் இரவு எலுமிச்சை சாருடன் பாலாடை சேர்த்து ஊற வைத்து மறுநாள் காலை அந்த கலவையை தடவி உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் குளித்தால் சருமத்தின் நிறம் மேம்படும்.

எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தின் மாஸ்க் போன்று தடவினால் சருமத்தின் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கி மென்மையடையும்.

பால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து சில நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் மாஸ்க் போன்று தடவலாம்.

முதல் நாள் இரவில் ஓட்ஸை ஊறவைத்து மறுநாள் காலையில் அரைத்து பேஸ்ட் செய்து அதில் எலுமிச்சை சாறு மற்றும் புளித்த தயிரை கலந்து சருமத்தில் தடவினால் அழுக்கு மற்றும் மாசு ஆகியவற்றை அகற்றி புத்துணர்ச்சி தரும்.

எலுமிச்சை தோலை நிழலில் உலர்த்தி பொடியாக்கி அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து கால் தேக்கரண்டி கிரீன் டீ இலை மற்றும் தேன் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவலாம். அதனால் எண்ணெய் பிசுபிசுப்பு அகன்று முகம் குளிர்ச்சி பெறுவதால் முகப்பரு வராது.

கடலை மாவு மற்றும் எலுமிச்சை பொடி ஆகியவற்றை சம அளவு எடுத்து சிறிதளவு நீருடன் கலந்து முகத்தில் பூசலாம். எலுமிச்சை பொடி, சந்தனப்பொடி மற்றும் கற்றாழை ஜெல் மூன்றையும் நன்றாக கலந்து முகத்தில் தடவலாம். இவை வறட்சியை நீக்கி எண்ணெய் சுரப்பை குறைக்க செய்வதால் மென்மையான மற்றும் பளிச்சென்ற சருமம் கிடைக்கும்.