கியூபவை பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகள் ஒன்றாக இணைக்க அமெரிக்க திட்டம்!

 கியூபா
கியூபா

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிக்கும் நாடுகளின் பட்டியலில் கியூபாவை இணைப்பது குறித்து அமெரிக்கா பரிசீலித்து வருவதாக டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரியொருவர் நேற்று (14) வியாழக்கிழமை ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் இது வொஷிங்டனுக்கும் ஹவானாவுக்கும் இடையிலான பெருகிய பதற்றமான உறவுகளுக்கு மற்றொரு பெரிய அடியாகும்.

சோசலிச வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலாஸ் மதுரோவுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாலும், கொலம்பியாவின் தேசிய விடுதலை இராணுவத்தின் (ELN) கிளர்ச்சிக் குழுவின் தலைவர்களுக்கு அளிக்கும் அடைக்கலம் காரணமாகவும் கியூபாவை அமெரிக்க பயங்கரவாத தடுப்புப் பட்டியலில் மீண்டும் வைக்க வேண்டும் என்று ஒரு நிலைப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

தனது பெயர் விபரங்களை வெளிப்படுத்தாது ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் பேசிய அந்த அதிகாரி, இந்த ஆண்டின் இறுதிக்குள் கியூபா குறித்த பட்டியலில் உள்வாங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கியூபாவை பயங்கரவாத பட்டியலில் இருந்து 2015 ஆம் ஆண்டு முறையாக அகற்ற அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா எடுத்த முடிவு, அந்த ஆண்டு இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை மீட்டெடுப்பதற்கான ஒரு முக்கியமான படியாக அமைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.