அமெரிக்காவில் டிக்டொக் செயலியைத் தடை செய்வோம்:டொனால்ட் ட்ரம்ப்!

4ddbaa2bd95de3b90f207d03d9755d85
4ddbaa2bd95de3b90f207d03d9755d85

சீனாவிற்கு சொந்தமான பிரபலமான டிக்டொக் செயலியை மைக்ரோசொப்ட் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக மைக்ரோசொப்ட் நிறுவனம் கருத்து தெரிவிக்க மறுத்துள்ளது.

டிக்டொக் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையொன்றில், “வதந்திகள் அல்லது ஊகங்கள் குறித்து நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை என்றாலும், டிக்டொக்கின் நீண்டகால வெற்றியில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்” என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், தனிநபர் தகவல் திருட்டு ஆகியவற்றால் சீனாவிற்கு சொந்தமான பிரபலமான டிக்டொக் செயலியை அமெரிக்காவில் டிக்டொக் செயலியைத் தடை செய்வோம் என அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

சீனாவின் பைட் டான்ஸ் தொழல்நுட்ப நிறுவனம் டிக்டொக்கை விற்க உத்தரவிட திட்டமிட்டுள்ளதாக வெளியிடப்பட்ட தகவல்களுக்குப் பின்னர் ட்ரம்பின் குறித்த கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

பைட் டான்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் 2017 இல் டிக் டொக் செயலியை அறிமுகப்படுத்தியது. பின்னர் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இளைஞர்களிடையே பிரபலமான மியூசிகல்.லி என்ற வீடியோ சேவையை வாங்கியது, இரண்டையும் இணைத்தது. சீன பயனர்களுக்கு டூயின் என்ற இரட்டை சேவை கிடைக்கிறது.

டிக்டொக்கின் வேடிக்கையான, முட்டாள்தனமான காணொளிகள் மற்றும் பயன்பாட்டின் எளிமை ஆகியவற்றால் இது மிகவும் பிரபலமாகிவிட்டது.

மேலும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களான பேஸ்புக் மற்றும் ஸ்னாப்சாட் இதை ஒரு போட்டி அச்சுறுத்தலாக பார்க்கின்றன. இது மில்லியன் கணக்கான அமெரிக்க பயனாளர்களையும், உலகளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் பயனாளர்களையும் கொண்டுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் சமீபத்திய மாதங்களில் மியூசிகல்.லி கையகப்படுத்தல் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அமெரிக்க ஆயுதப்படைகள் தங்கள் ஊழியர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட தொலைபேசிகளில் டிக்டோக்கை பதிவிறக்க தடை விதித்துள்ளன.

டிக்டொக்கை தடை செய்வதை அமெரிக்கா பரிசீலித்து வருவதாக வெளியுறவு இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏனைய நாடுகளும் டிக்டொக் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இந்நிலையில், இந்தியா சில வாரங்களுக்கு முன் டிக்டொக் உள்ளிட்ட சீனாவின் செயலிகளின் பயன்பாடுகளை தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.