பண்டத்தரிப்பு – சாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலையில் 65 வருடங்களுக்கு பின்னர், முதன்முறையாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை வடபிரதேச எம்.ஜி.ஆர் முன்னேற்றக் கழகம் கௌரவித்துள்ளது.
எம்.ஜி. இராமச்சந்திரனின் 33 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) வித்தியாசாலை மண்டபத்தில் மேற்படி கழகத் தலைவர் சமூகதிலகம் வ.இ.செல்வக்குமார் தலைமையில் இக்கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.
பரீட்சையில் சித்தியடைந்த சி.பிருந்தா – 167 புள்ளிகள், சு.நிருஷா – 165 புள்ளிகள், இ.ஹேனுசா – 162 புள்ளிகள் ஆகிய மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். பழைய மாணவன் த.சர்வானந்தன் மேற்படி மாணவர்களின் பெயர்களில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தலா 5 ஆயிரம் ரூபா வீதம் வைப்புச் செய்து புத்தகங்களை வழங்கினார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த 12 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதன்போது பாடசாலை முதல்வர் த.ஸ்ரீகமலநாதன் பொன்னாடை போர்த்து நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக ஆப்பிக்கோ காப்புறுதி நிறுவன முகாமையாளர் எம்.சசிதரன் மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர் அ.நிரோஜன், வட பிராந்திய எம்.ஜி.ஆர் கழகத்தின் பிரதேச தலைவர் எஸ்.கஜீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
எம்.ஜி.இராமச்சந்திரனுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டனஎன்பதும் குறிப்பிடத்தக்கது.