மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் கொத்தணியில் மேலும் 2 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று (ஜன. 1) வெள்ளிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 2 பேருக்கும் தொற்று உள்ளதாக அறிக்கை கிடைத்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்ட 21ஆவது நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 133ஆக உயர்வடைந்துள்ளது.
தெல்லிப்பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த மருதனார் சந்தையில் கோரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய இருவருக்கே தொற்று உள்ளதாக கண்டறிப்பட்டுள்ளது.
இவர்கள் 2 பேரும் 14 நாள்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தபட்டவர்கள் என்றும் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று 240 பேருக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.