சுங்கத் திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் இராணுவத்தினருக்கு எதிராக போர்க்கொடி!

download 28
download 28

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் கடமைகளில் இராணுவத்தினரோ அல்லது மூன்றாம் தரப்பினரோ தலையிடுவதை அனுமதிக்க மாட்டோம் என்று சுங்கத் திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை சுங்கத் திணைக்கள தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, சுங்க தொழிற்சங்க பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

சுங்கத் திணைக்களத்தில் உள்ள ஊழல்மிக்க அதிகாரிகளை நீக்கிவிட்டு, இராணுவத்தினரைக் கொண்டேனும் கடமைகளைச் செய்வதாக அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கு சுங்கத் திணைக்களத்தின் தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

சுங்கத் திணைக்கள அதிகாரிகள் ஊழல் மிக்கவர்கள் என ஜனாதிபதி பொதுவாகக் கூறியமை நியாயமற்றது என்றும் சுங்கத் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இனந்தெரியாத சக்தியொன்றே சுங்க திணைக்களம் மீது தவறான தகவல்களை ஜனாதிபதியிடம் கூறியுள்ளது என்றும், அதன் காரணமாக ஜனாதிபதி சுங்க அதிகாரிகளைக் கடிந்துகொள்கின்றார் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2020ஆம் ஆண்டில் சுங்கத் திணைக்களத்துக்கு வருவாய் இலக்காக 647 பில்லியன் ரூபாய்கள் தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், தாம் 641 பில்லியன் வருவாய் ஈட்டிக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் கூறியுள்ளனர்.