குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீர்வழங்கல் அமைச்சில் இன்று இடம்பெற்ற அமைச்சின் முன்னேற்ற மறுஆய்வு கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டில் பல பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் வசதி இல்லாமல் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதனால் குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகளுக்கு விரைவாக குடிநீரை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இதுதொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்கவேண்டும்.
குறிப்பாக கிராமப்புறங்களில் இருக்கும் பாடசாலைகளிலேயே இந்த பிரச்சினை அதிகமாக இருகப்பதாகவே தெரிவிக்கப்படுகின்றது. என்றாலும் பொதுவாக அனைத்து பாடசாலைகளிலும் சுத்தமான குடி நீர் வசதியை ஏற்படுத்திக்கொடுக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் குடிநீர் வசதி இல்லாத பாடசாலைகள் தொடர்பாக அறிவிக்குமாறு மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு ஏற்கனவே அறிவித்திருக்கின்றோம். அதன் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என தெரிவித்துள்ளார்.