நீதியரசர் விக்னேஸ்வரனின் இயலாமையாலே கிடைத்த சந்தர்ப்பம் தவறவிடப்பட்டது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சுட்டிக்காட்டு

IMG 20210218 105348
IMG 20210218 105348

தமிழ் மக்களுக்கு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த மாகாண சபை என்ற அருமையான வாய்ப்பை நீதியரசர் விக்னேஸ்வரனும் தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தவறவிட்டமையே, தற்போது மாகாணசபை பற்றிய விமர்சனத்திற்கு காரணமாகியுள்ளது என இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் பேர்கலரிடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் விஷேட பிரதிநிதிகளை இலங்கைக்கான சுவிசர்லாந்தின் புதிய தூதுவர் டொமினிக் பேர்கலர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

புதிதாக பதவியேற்றுள்ள சுவிசர்லாந்து தூதுவர் வடக்கிற்கான முதலாவது பயணத்தை மேற்கொண்டிருந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்ப்பாணத்திலுள்ள தலைமை அலுவலகத்தில் இன்றையதினம்(18) காலை குறித்த சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சார்பில் கடற்றொழில் அமைச்சரின் சிரேஸ்ட ஆலோசகரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான சின்னத்துரை தவராசா மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆணையாளரும் யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட பிரதிநிதிகளால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

13 ஆவது திருத்தச் சட்டம் ஏற்படுத்தப்பட்டு ஏறத்தாள 27 வருடங்களுக்கு பின்னரே வடக்கு கிழக்கிற்கான மாகாணசபை தேர்தல் நடைபெற்றது. இந்த இடைவெளியால் மாகாணசபைக்கான அதிகார ஏற்பாடுகள் சில மத்தியப்படுத்தப்பட நேரிட்டுள்ளது.

ஆனாலும் இதை மாற்றியமைக்க தமிழ் மக்களுக்கு சிறந்த சந்ரப்பம் 2013 ஆம் ஆண்டு நீதியரசர் விக்னேஸ்வரனுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் கிடைத்தது. மக்களை உசுப்பேற்றி வாக்குகளை அபகரித்து மாகாணசபையை கைப்பற்றியிருந்தனர். ஆனால் எதையும் செய்யாது காலத்தை வீணடித்து விட்டு இன்று கதையளந்து வருகின்றனர்.

குறிப்பாக அன்று சுவிஸ் அரசு கூட மாகாணசபை நியதிச் சட்டங்களை ஆகச் சொல்லி நிதியுதவியும் வழங்கியிருந்தது. நான் எதிர்க் கட்சி தலைவராக இருந்தபோதிலும் அதை முன்னெடுக்க சொல்லி பல தடவகைள் வலியுறுத்தியிருந்தேன். ஆனாலும் நீதியரசர் விக்கினேஸ்வரன் அதில் எந்தவித அக்கறை எடுக்கவில்லை. 13 இல் இருக்கும் இவ்வாறான பலவற்றை நடைமுறைப்படுத்தியிருந்தால் இன்று இவ்வாறான பிரச்சினைகள் ஏற்பட்டிருக்காது. ஆனால் இன்று நாம் நீதியரசர் விட்ட அந்த குறைகளையும் சேர்த்தே முன்னெடுக்க வேண்டியுள்ளது.

எது எவ்வாறானாலும் இலங்கை நாட்டில் அனைவரும் பேதங்களற்றவகையில் சமாதானமாகவும் சமத்துவமாகவும் வாழவேண்டும் என்பதையே நாம் அக்கறை கொள்ளவேண்டும். நட்டில் மக்கள் அனைவரும் சமாதானமாக ஐக்கியத்துடன் வாழவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

இறுதியாக கிடைத்த பொன்னான வாய்ப்பை வடக்கு மாகாண சபையின் 5 வருடங்களை நீதியரசர் விக்னேஸ்வரன் இழக்கச் செய்துவிட்டார்.

ஆனால் 13 ஆவது திருத்த சட்டமே சிறந்து என்றும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றுவரை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றார்.

அன்று தும்புத்தடியால் கூட தொடமாட்டோம் என்றவர்கள் இன்று அதை பெற்றுக்கொள்ள வேண்டும் என கூறத்தொடங்கியுள்ளதுடன் அதை காப்பாற்றுமாறு எங்களிடமே கூறுகின்றனர்.

அந்தவகையில் ஒரு சில தினங்களில் இது தொடர்பான அரசியலமைப்பு குழுவை எமது கட்சி சந்திக்கவுள்ளது. அதில் இது தொடர்பில் நாம் வலியுறுத்தவுள்ளோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.