அமெரிக்காவில், 5 நாட்களுக்கு தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கொவிட்-19 நோயால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 5 இலட்சத்தைக் கடந்துள்ளமை காரணமாக, இந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அரச நிறுவனங்களுக்கு நேற்றைய தினம் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஒரு தேசமாக இத்தகைய கொடூரமான விதியை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த நிலையில், கொவிட்-19 தொற்றை எதிர்த்து, அமெரிக்கர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.
கொவிட்-19 தொற்றினால், சர்வதேச ரீதியில் அதிக பாதிப்பை அமெரிக்க எதிர்நோக்கியுள்ளது.
அமெரிக்காவில் கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 28,822,364 ஆக பதிவாகியுள்ளது.
அத்துடன் மரணித்தவர்களின் எண்ணிக்கை 512,477 ஐக் கடந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச ரீதியில் நாடொன்றில் பதிவான அதிகூடிய கொவிட் மரண எண்ணிக்கை இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.