கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான விற்பனை நிலையம் ஒன்றிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.
பிரபல அரசியல் வாதி ஒருவரின் சிபார்சின் பெயரிலேயே குறிப்பிட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவ் ஊடகவியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தார். யாழ்ப்பாண மாவட்டத்தில் 64 மது நிலையங்களுக்கு அனுமதி வழங்கியுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு ஒன்றுகூட இல்லை என்று கடந்த ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஒன்றில் கவலை வெளியிட்டார். மதுபான விற்பனை நிலையத்திற்கு அனுமதி வழங்கினால் கஞ்சா, கசிப்பு போன்ற நடவடிக்கைகள் குறையும் என்பதாலேயே தான் அவ்வாறு கோரிக்கை விடுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் விளக்கமளித்திருந்தார்.