ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு இரணைதீவு பொருத்தமான இடம் இல்லை எனப் பாராளுமன்ற உறுப்பினரும்,யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
மருதங்கேணிப் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
இரணைதீவு மக்கள் மீள் குடியேற்றம் செய்யப்பட்டு தற்போது தான் படிப்படியாக வாழ்வாதார ரீதியாக முன்னேறி வருகின்றனர். அண்மையில் இரணைதீவில் கடலட்டை உற்பத்திக் கிராமம் ஒன்றும் கடற்றொழில் அமைச்சர் ஊடாக உருவாக்கப்பட்டுள்ளது. அம் மக்கள் மீளவும் தமது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப முயற்சிக்கும் வேளையில் ஜனாஸாக்கள் புதைப்பு என்பது அந்தப் பகுதிக்கு பொருத்தமற்றது.
எனவே இது சம்பந்தமாக நிச்சயமாக அரசாங்கத்துக்கு எங்கள் கருத்துகளைத் தெரிவித்து மறுபரிசீலனை செய்யக் கோரத் தயாராக உள்ளோம் என்றார்.