தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணியின் இயக்குநராக முன்னாள் தலைவர் கிரேம் ஸ்மித் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனினும், அவர் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு மட்டும் அணியின் இயக்குநராக செயற்படுவார் என தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
வீரர்கள் எதிர்ப்பு, ஊழல், மோசமான நிர்வாகக் குற்றச்சாட்டுகள் என பல்வேறு குற்றச்சாட்டுகளை தென்னாபிரிக்கா கிரிக்கெட் எதிர்கொண்டிருந்த நிலையில், கிரேம் ஸ்மித் இயக்குநராக நியமனம் பெற்றுள்ளார்.
தென்னாபிரிக்கா அணி, இங்கிலாந்து அணியை சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளது. இதன்போது 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 ரி-20 போட்டிகளில் தென்னாபிரிக்கா அணி விளையாடுகின்றது. இத்தொடரின் முதல்போட்டி, கிறிஸ்மஸ் தினத்துக்கு அடுத்தநாளான பொக்சிங் டேயில் தொடங்குகிறது.
இந்தத் தொடர் முதல் அவுஸ்ரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர், இது மார்ச் 7ஆம் திகதி முடிவடைகிறது, இதுவரை ஸ்மித் இயக்குநராக நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 வயதான கிரேம் ஸ்மித் தென்னாபிரிக்கா கிரிக்கெட்டுக்காக 117 டெஸ்ட், 197 ஒருநாள் மற்றும் 33 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.