மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி காவல்துறை பிரிவிலுள்ள மகிளூர் பிரதேசத்தில் பூட்டியிருந்த வீடு ஒன்று தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ள சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டின் உரிமையாளர் அவரின் மகன் உட்பட 2 பேரை சந்தேகத்தில் இன்று புதன்கிழமை (07) கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்துக்கு அருகிலுள்ள இரண்டு பிள்ளைகள் உட்பட 4 பேர் கொண்ட வீட்டின் உரிமையாளர் சம்பவதினமான நேற்று செவ்வாய்க்கிழமை இரவு (06) தகரத்தினால் கட்டப்பட்ட வீட்டை பூட்டிவிட்டு உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் தங்குவதற்கு சென்றுள்ளனர்.
இந்த நிலையில் நள்ளிரவு 1.30 மணியளவில் வீடு தீப்பற்றி எரிந்ததையடுத்து அயலில் உள்ளவர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இருந்தபோதும் வீடு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளது .இதனையடுத்து இந்த வீடு தீப்பற்றிய சம்பவம் தொடர்பில் குறித்த வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டின் உரிமையாளரான 50 வயதுடைய ஒருவரும் அவரின் 18 வயதுடைடய மகனையும் சந்தேகத்தில் இன்று காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.