பிரதமரின் நாடாளுமன்ற நடவடிக்கைகளுக்கான செயலாளராக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.
அதற்கான நியமனக் கடிதத்தினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று(09) அலரி மாளிகையில் வைத்து கையளித்தார். உதித் சஞ்சய லொக்குபண்டார அனுபவம் வாய்ந்த அரசியல்வாதியான விஜமு லொக்குபண்டாரவின் சிரேஷ்ட புதல்வராவார்.
பதுளை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றிற்கு தெரிவான உதித் லொக்குபண்டார, 2015ஆம் ஆண்டு வரை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்தார்.
அமைச்சுக்களின் ஆலோசனை குழுக்கள் பலவற்றில் பிரதிநிதியாக செயற்பட்ட உதித் லொக்குபண்டார, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் பொருளியல் துறையில் கல்வி பயின்ற உதித் லொக்குபண்டார, லண்டன் வர்த்தக சபையில் சந்தைப்படுத்தல் டிப்ளோமா மற்றும் பட்டய சந்தைப்படுத்தல் முகாமைத்துவ நிபுணராகவும் செயற்பட்டிருந்ததாகவும் பிரதமர் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது