ரஷ்யா தனது அதிநவீன எஸ் – 500 விமான எதிர்ப்பு ஏவுகணை கட்டமைப்பை எதிர்காலத்தில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்கக்கூடும் என்று இராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான ரஷ்ய கூட்டாட்சி சேவையின் பணிப்பாளர் டிமிட்ரி ஷகேவ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் இராணுவம் விரைவில் தயாரிக்கப்பட்ட முதல் தொகுதி எஸ் – 500 ஏவுகணை கட்டமைப்பை உள்வாங்க உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் திங்களன்று தெரிவித்திருந்தார்.
அந்த வகையில் அந்த கட்டமைப்புகள் போதுமான அளவு தேசிய ஆயுதப் படைகளுக்கு வழங்கப்பட்ட பின்னர் அவற்றை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யலாம் என பணிப்பாளர் டிமிட்ரி ஷகேவ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிநவீன கட்டமைப்பின் எதிர்கால உரிமையாளர்களாக, இந்தியா, சீனா மற்றும் நீண்டகால பங்காளர்கள் மற்றும் யூகிக்கக்கூடிய பரஸ்பர உறவுகளைக் கொண்ட அனைத்து நாடுகள் குறித்தும் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஏஸ்-500 ஏவுகணை கட்டமைப்பானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் , ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் விமானங்களை இடைமறித்து அழிப்பதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.