இந்தியாவின் பீஹார் மாநிலத்தின், லகிசராய் மாவட்டத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் அறுவர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த அறுவரில் 5 பேர், நடிகர் சுஷாந்த் சிங்கின் உறவினர்கள் என தெரியவந்துள்ளது.
பிப்ரா என்ற கிராமத்துக்கு அருகில் இன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
தமது குடும்ப உறவினர் ஒருவரின் மரண சடங்கில் பங்கேற்று வீடு திரும்பியபோது, அவர்கள் பயணித்த வாகனம் எதிரில் வந்த வெற்று எரிவாயு கொள்கலன்களை ஏற்றிவந்த கனரக வாகனமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில், சுஷாந்த் சிங்கின் உறவினரான லல்ஜித் சிங், அவரது மகன்களான நெமானி சிங் மற்றும் சந்த்ரா சிங், மகள் பேபி தேவி மற்றும் மருமகள் அனிதா தேவி மற்றும் வாகன சாரதி ப்ரீதம் குமார் ஆகிய அறுவர் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் மேலும் நால்வர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹரியானா மாநிலத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஓம் பிரகாஷ் சிங், உயிரிழந்த லல்ஜித் சிங்கின் மைத்துனராவார். ஓம் பிரகாஷ் சிங், சுஷாந்த் சிங்கின் மைத்துனராவார்.
இந்நிலையில், ஓ.பி. சிங்கின் சகோதரியின் இறுதி சடங்கில் பங்கேற்று வீடு திரும்பியபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.