பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்த போராட்டத்தின்மீது, கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டமை குறித்து, மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
இது குறித்து விசாரணைகளை நடத்த எதிர்ப்பார்ப்பதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, காவல்துறைமா அதிபர், அடுத்தவாரம் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட உள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
பொல்துவ சந்தியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவல்துறை வீதித் தடைகளை அகற்றி, நாடாளுமன்றத்தை நோக்கி பயணிக்க முற்பட்டபோது, நேற்று முன்தினமும், நேற்றும் மாலை வேளையில் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ள காவல்துறை நடவடிக்கை எடுத்தது.
இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கூடாரங்கள் சேதமாக்கப்பட்டதுடன், அவற்றில் சேமித்து வைக்கப்பட்டிருந்த உணவுகளும் வீணடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில், காவல்துறைமா அதிபர், அடுத்தவாரம் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட உள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்துக்கு முன்பாக சிலர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், எதிர்வரும் செவ்வாக்கிழமை கட்சித் தலைமையகத்தில் கலந்துரையாடல் நடத்த அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.