இந்தியாவின் மேற்கு டெல்லியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில், நேற்று மாலை ஏற்பட்ட பாரிய தீப்பரவலில் 27 பேர் பலியாகினர்.
40 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன், 60 முதல் 70 பேர் வரை குறித்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
மேற்கு டெல்லியான முண்டக் பகுதியின் தொடருந்து நிலையத்துக்கு அருகே உள்ள ஒரு வணிக வளாக கட்டடத்தில் இந்தத் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
சுமார் 24 தீயணைப்பு குழுவினர் இந்தத் தீப்பரவலைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கட்டடத்தின் முதலாம் மாடியில் உள்ள சிசிடிவி கமரா மற்றும் ரவுட்டர் தயாரிக்கும் நிறுவனத்தின் அலுவலகத்தில் இருந்து தீப்பரவல் ஏற்பட்டதாக தீயணைப்புத்துறை ஆரம்பக்கட்ட தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும், தீப்பரவலுக்கான உறுதியான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.