தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் இந்த விதத்திலேயே முன்னெடுத்து செல்லப்பட்டால், எதிர்வரும் 20ஆம் திகதியின் பின் நாட்டுக்குள் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை பகுதி பகுதியாக நீக்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
அத்தியவசிய சேவைகள் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இதனை கூறியுள்ளார்.
எனினும் கொரோனா வைரஸ் காரணமாக அதிக பாதிப்பான நிலைமையை எதிர்நோக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ள மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு புத்தாண்டுக்கு ஊர்களுக்கு செல்ல சந்தர்ப்பம் வழங்கினால், எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் ஊரடங்கு சட்டத்தை தளர்த்த சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் பசில் குறிப்பிட்டுள்ளார்.
மேல் மாகாணத்தில் தங்கியிருக்கும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் புத்தாண்டுக்கு தமது ஊர்களுக்கு செல்ல அரசாங்கத்திடம் போக்குவரத்து வசதிகளை கோரியுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் நிலவும் நிலைமைக்கு அமைய இவர்கள் கொழும்பில் இருந்து வெளியேறினால், கொரோனா வைரஸ் சில விதத்தில் பரவக் கூடும் எனவும் அப்படி நடந்தால், கிராமங்கள் முழுவதும் பரவி விடும் எனவும் சுகாதார துறையினர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் பசில் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.