புகையிலை செய்கைக்கு பதிலான மாற்று பயிற்செய்கையில் மக்கள் ஆர்வம்

20200606 091523
20200606 091523

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் புகையிலை செய்கைக்கு பதிலான மாற்று பயிற்செய்கையில் ஈடுபடுவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக வடக்கு மாகாண விவசாய பணிப்பாளர் எஸ்.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

புகையிலை பயிர் செய்கையினை நாட்டில் தடை செய்து புகையிலைக்கு எதிரான மாற்று பயிற்செய்கையை நடைமுறைப்படுத்தும் கொள்கைக்கு இணங்க யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் புகையிலைக்கு பதிலாக மாற்றுப் பயிர்கள் விவசாயத் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டு மக்கள் அப்பயிர்ச் செய்கையினை மேற்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும், யாழ்ப்பாணம் தீவகத்தில் தற்போதைய விவசாய நிலைமைகள் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும் போதே எஸ்.சிவகுமார் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

யாழ் .மாவட்டத்தின் தீவகப் பகுதியில் அண்மைக்காலமாக புகையிலைச் செய்கை அதிகமாக இடம்பெற்று வருகின்றது. இதனால் விவசாயிகள் அதிகளவான வருமானத்தினை பெற்று வருகின்றனர்.

புகையிலைச் செய்கைக்கான ஒரு மாற்று பயிற்செய்கையினை கண்டறிவது தொடர்பில் விவசாய ஆராய்ச்சி நிலையங்களின் ஊடாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த புகையிலைச் செய்கையில் இருந்து விடுபட வேண்டும் என்பது மக்களுடைய விருப்பம் அது தொடர்பில் மாற்று பயிற்செய்கைகளினை மக்கள் மேற்கொள்ள நாங்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம்.

தற்போது மிளகாய் செய்கையினை பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகின்றது. கொரோனா தொற்றுக்கு பின்னர் செத்தல் மிளகாய் செய்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

செத்தல் மிளகாய் என்பது ஒரு மாற்று தீர்வாக அமையும். அதேபோல் கற்றாழையையும் தீவகப் பகுதிகளில் பயிரிட விவசாயத் திணைக்களம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதை தவிர விவசாய ஆராய்ச்சி நிலையம் ஊடாக விவசாயிகளை ஊக்குவிக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன்மூலம் விவசாயிகள் அதிகளவு வருமானத்தை பெறக்கூடிய நிலை உருவாக்கப்படுவதுடன் சாமை போன்ற இதர பயிற்செய்கைகளையும் மேற்கொள்வதற்கு விவசாயிகள் ஊக்குவிக்கப் படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.