காரைநகர் படகு கட்டும் தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவது தொடர்பில் ஆராயுமாறு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், சீனோர் நிறுவனத்தின் ஊடாக பயணிகள் போக்குவரத்து படகுகளை உருவாக்கி அவற்றை கொழும்பில் பயணிகளில் போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ள நிலையில் குறித்த வேலைத் திட்டம் தொடர்பிலும் ஆராயுமாறும் அமைச்சரினால் தெரிவிக்கப்பட்டது.
கடற்றொழில் அமைச்சின் செயற்றிட்ட ஆய்வு மற்றும் மீளாய்வுக் கூட்டம் இன்று(17) மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு மாநாட்டு மண்பத்தில் இடம்பெற்ற நிலையிலேயே சீனோர் அதிகாரிகளிடம் அமைச்சர் குறித்த விடயங்களை தெரிவித்துள்ளார்.
மேலும், சீனோர் நிறுவனத்தின் படகு கட்டும் செயற்பாடுகள் கடந்த காலத்தில் வினைத் திறனுடன் மேற்கொள்ளப்படாமையினால் அவற்றின் நடவடிக்கைகள் பாதிக்கப்ட்டுள்ளதுடன் சீனோர் நிறுவனம் பற்றிய நன்மதிப்பும் பாதிக்கப்பட்டுள்ளாக சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இழந்த நன்மதிப்பை மீண்டும் ஏற்படுத்திக்கொள்வதற்கு, பயணிகள் படகுகளை உருவாக்கி கொழும்பு நகரில் பயணிகள் கோக்குவரத்திற்கு பயன்படுத்தும் ஜனாதிபதியின் திட்டத்தினை சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
காரைநகரில் அமைக்கப்பட்டுள்ள சிறியரகப் படகுகளை உருவாக்கும் உட்கட்டுமானங்களைக் கொண்ட தொழிற்சாலையை உடனடியாக செயற்படுத்துவதன் மூலம் சிறிய ரகப் படகுகளை உருவாக்க முடியும் எனவும் தெவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மீன், கருவாடு போன்றவற்றை படிப்படியாக குறைத்து உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாகவும் இறக்குமதி அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் பொறிமுறையை ஒழுங்குபடுத்துவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
அத்துடன், கடற்றொழலில் அமைச்சின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற அனைத்து திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களையும் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே கட்டிடத் தொகுதியில் இயங்கச் செய்வதன் ஊடாக மக்களுக்கு இலகுவான சேவையை வழங்குவதுடன் திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு இடையில் சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.
இக்கலந்துரையாடலில், அமைச்சுக் கட்டமைப்புக்களினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத்திட்டங்கள் ஒவ்வொன்றுக்கும் காலவரையறை நிர்ணயித்து அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தலையும் திணைக்களங்கள் , நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர ஆகியோர் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.