கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனையில் ஈடுபட்ட அம்பாறை வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, 9 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி குறித்த வர்த்தகர்கள் அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முயற்சித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் குழுவினால் நேற்றைய தினம் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் தொடர்ச்சியான முறைப்பாடுகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, 9 வர்த்தகர்கள், கட்டுப்பாட்டு விலையை மீறி அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்ய முயற்சித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டரிசி, வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி 96 ரூபாவாகவும், சம்பா அரிசி மற்றும் சிவப்பு அரிசி 98 ரூபாவாகவும், பச்சை அரிசி வெள்ளை மற்றும் சிவப்பு அரிசி 93 ரூபாவாகவும், கீரிசம்பா அரிசி 120 ரூபாவாகவும், கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது