நாட்டில் மேலும் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில், பேலியகொடை மீன் சந்தை பகுதியில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 23 பேருக்கும் , தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 37 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 2,451 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,920 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 2,406 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 21 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளான 3,501பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்தும் உள்ளனர். அதேநேரம் வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் 356 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.