ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழையவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் புதிய ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றார்.
ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து அரசியலில் பயணம் மேற்கொள்ள விரும்புவதாகவும் இதனால் தேசிய பட்டியல் உறுப்பினராக தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழையும் எதிர்பார்ப்பில் உள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இதன் காரணமாகவே மைத்திரி குணரத்னவுக்கு ஊவா மாகாண ஆளுநர் பதவியைக் கொடுத்து, டிலான் பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகச் செய்து, அந்த வெற்றிடத்தின் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய அவர் முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன மற்றும் டிலான் பெரேரா பதவி விலக மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, பதவி விலகி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குள் நுழைய இடமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.