அரசியல்வாதிகள் செய்யும் வியாபாரம்!

5 fdg
5 fdg

முஸ்லிம், தமிழ் அரசியல்வாதிகள் அரசியல் எனும் பெயரில் ஒரு வியாபாரத்தையே நாட்டில் முன்னெடுத்து வருவதாக வல்பொல பியநந்த தேரர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பிக்குகள் மகா சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும், அமெரிக்காவின் லொஸ் அஞ்ஜலீஸ் நகர ஸ்ரீ லங்கா பௌத்த விகாரையின் விகாராதிபதியுமான வல்பொல பியநந்த தேரர் தெரிவித்ததாக இன்றைய (08) சகோதர தேசிய வார இதழொன்று இதனைக் கூறியுள்ளது.

இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தேரர் குறித்த பத்திரிகை நிறுவனத்துக்கும் வருகை தந்துள்ளார். இதன்போது தேரர் கூறிய கருத்துக்களையே இன்றைய வார இதழ் இவ்வாறு வெளியிட்டுள்ளது.

முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்வது ஒரு வியாபாரம். அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும், அடிப்படைவாத குழுக்களுக்கும் வேண்டிய பிரகாரமே செயற்படுகின்றனர். இலங்கையில் இடம்பெறும் சிறிய ஒரு இனக் கலவரமொன்றை வீடியோ எடுத்து வெளிநாட்டுக்கு அனுப்பினால், அந்த அரசியல்வாதிகளுக்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்கின்றது.

அதேபோன்று, அரசியல் மாற்றமொன்று வரும் போது இலங்கையிலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளும், அவர்களது செயலாளர்களும் அரசியல் புகழிடம் வேண்டி ஐரோப்பிய நாடுகளிடம் செல்கின்றனர். விசேடமாக அமெரிக்க போன்ற நாடுகளிடம் செல்கின்றனர்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் மட்டுமல்ல, தமிழ் அரசியல்வாதிகளும் இந்த திருவிளையாடலை சரியாக முன்னெடுக்கின்றனர். கனடாவின் டொரொன்டோ நகரில் இலங்கை தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் புகழிடம் கோரி அந்நாட்டுக்குச் சென்றவர்கள். அரசியல் புகழிடம் கோரி வீசா கோருவதற்கு தேவையான ஆவணங்களை தயாரிக்கும் அனுபமுள்ள சிரேஸ்ட சட்டத்தரணிகள் அவர்களிடம் உள்ளனர். பொய்யான தகவல்களை கூறி வீசா கோரும் போது அந்நாட்டிலுள்ள அதிகாரிகள் அனுதாபம் தெரிவித்து வீசா வழங்குகின்றனர்.

அந்த நாட்டு அதிகாரிகள் இலங்கை மக்களின் குள்ளநரித்தனம் பற்றி அறிந்தவர்கள் அல்லர். அந்த நாடுகளில் உள்ள தமிழ் மக்கள் எமது நாட்டில் இடம்பெறும் இனவாத கலவர வீடியோக்களைக் காட்டி அமெரிக்க கிரீன் கார்ட் கோரிக்கையை விடுகின்றனர்.

இந்த வீடியோக்கள் மூலம் ஐரோப்பிய நாடுகளில் உள்ள மக்களின் உள்ளங்களில் எமது நாட்டைப் பற்றி கறுப்பு படமொன்றை வரைந்துள்ளனர். ஐரோப்பாவிலுள்ள மக்கள் எமது நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும் பயப்படுகின்றனர். எமது விகாரைக்கு வரும் அமெரிக்கர்கள் என்னிடம் இதனைக் கூறியுள்ளனர். இது ஒரு ஆபத்தான நிலைமையாகும்.

எமது நாட்டு மக்கள் கடந்த தேர்தலில் தமது கடமையை சரியாக செய்துள்ளனர். இப்போது அரசாங்கம் தனது கடமையை செய்வதே அவர்கள் முன் உள்ள பொறுப்பாகும் எனவும் தேரர் தனது நீண்ட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.