சுமந்திரன் குட்டி இராணுவ ஆட்சியை நடத்துகிறார்- சிவாஜிலிங்கம் குற்றச்சாட்டு

M.K.Sivajilingam
M.K.Sivajilingam

சுமந்திரன், குட்டி இராணுவ ஆட்சியை நடத்துவதாக வடமாகாண முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் குற்றம் சுமத்தியுள்ளார்.

திருகோணமலை, மூன்றாம் கட்டைப் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “சுமந்திரனைச் சூழ 20 விசேட அதிரடிப் படையினருடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் உள்ளார்கள். இப்படியிருக்க இராணுவ ஆட்சி என்று சொல்லுமளவுக்கு இவரே செயற்படுகிறார். இந்நிலையில் இராணுவ ஆட்சியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பது நகைச்சுவையாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பு திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னி ஆகிய மாவட்டங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தியுள்ளபோதிலும் யாழ்ப்பாண தேர்தல் தொகுதியில் எவ்வித கூட்டங்களையும் நடத்த முடியாமல் பலவீனமாக இருப்பதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.

அத்துடன், மதுபானசாலைகளை நடத்துபவர்கள் வீட்டுச் சின்னத்திலேயே அதிகளவில் போட்டியிடுகின்றார்கள் என்றும் இவ்வாறானவர்கள் எவ்வாறு தமிழ் மக்களுக்கு சேவைசெய்யப் போகின்றார்கள் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இந்நிலையில், இம்முறை தேர்தலில் மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என சிவாஜிலிங்கம் கேட்டுக்கொண்டுள்ளார்.