ஜெனிவாவில் புதிய பிரேரணை – வரவேற்கிறார் சித்தார்த்தன்!

ss 3 678x381
ss 3 678x381

ஜெனீவா கூட்டத்தொடரின் போது இலங்கையின் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி புதிய பிரேரணையொன்றே வலுவானதாக கொண்டு வரப்பட வேண்டும் என்ற யோசனையை அமெரிக்கா முன்வைத்தமை வரவேற்கத்தக்கது என்று தமிழ் மக்கள் விடுதலைகழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அந்த தீர்மானம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள 30/1 தீர்மானத்தினை விடவும் வலுவானதாக அமையவதாக இருந்தால் பாதிக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தமிழ்த் தேசியத் தரப்புக்களும் ஒன்றிணைந்து பரிந்துரைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“ ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் 2015ஆம் ஆண்டு இலங்கையின் இணை அணுசரணையுடன் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக தொடர்ச்சியான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் அந்த தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கு கடந்த அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகள் சந்தர்ப்பம் அளிக்கப்பட்டதோடுரூபவ் புதிய அரசாங்கம் அத்தீர்மானத்திலிருந்து விலகியுள்ளது. இந்நிலையில் அடுத்த அமர்வில் பிரித்தானியே முன்னின்று இந்த விடயங்களை கையாளவுள்ளது. எனினும் கடந்த காலத்தில் இலங்கை தொடர்பான பிரேரணைகளை தயாரித்து தீர்மானங்களை நிறைவேற்றிய அனுபவம் நிறைந்த அமெரிக்காவும் அதற்கு பக்கத்துணையாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புதிய பிரேரணையொன்று கொண்டு வரப்படுவதானது இலங்கையின் பொறுப்புக்கூறலை மேலும் அழுத்தமாக கூறுவதற்கும் சர்வதேசத்தின் மேற்பார்வையையும் பிடியையும் வலுவாக்குவதற்கும் ஏதுவானதாக அமையும்.

ஆகவே அவ்விதமான புதிய பிரேரணையொன்று தயாரிக்கப்படும் செயற்பாடுகள் இடம்பெறுகின்றபோது நீதிக்காக காத்திருக்கும் பாதிக்கப்பட்ட மக்களினை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தரப்புக்களும் ஒன்றிணைந்து வலுவானதொரு பிரேரணையை தயாரிப்பதற்குரிய முன்மொழிவுகளை ஏகோபித்து வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும்.

அதனை விடுத்து தமிழ்த் தரப்புக்கள் இந்த விடயத்தினை தனித்தனியாக அரசியல் இலாபமடைவதற்காக கையாள முனைகின்ற போது இலங்கை அரசாங்கம் மிக இலகுவாக நழுவிக்கொள்ளும் நிலைமை ஏற்படும் ஆபத்துள்ளது. ஆகவே இந்தத் தருணத்தினை சரியாக புரிந்துகொண்டு அனைத்து தலைமைகளும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பதோடு அதற்குரிய முன் நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு தயாராகவே உள்ளேன் என்றார்.